சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.
  
செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை தாறுமாறாக வரைந்துகொண்டிருந்தது.

விழாவை பாடகர், இசையமைப்பாளர் கார்த்திக்கும், பாடகி சின்மயியும் தொகுக்க, பரிசை வழங்க வேறு வேறு கலைஞர்கள் மேடையேற ஆரவார அட்டகாசத்துக்குக் குறைவில்லை. -நயன்தாராவிடம் பிரபுதேவா எங்கே? விக்ரமைப் பேச விடாது தல ரசிகர்களின் கூச்சல்- என்று பயங்கர அலப்பரைகளுக்கு நடுவே, திடீரென்று தோன்றி அதே பாட்டுக்கு அதே நடனத்தை ஆடினார் தனுஷ். இடையில் எங்க ஏரியா உள்ளவராதே என்று எச்சரிக்கை வேறு.

எதிர்பார்த்த்துபோலவே ஆடுகளம் எல்லாப் பரிசுகளையும் வேண்டாமென்று சொல்லாமல் பெற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து வாகைசூடவா. வைரமுத்து போன்ற மூத்த கவிஞர்கள் மீண்டும் மீண்டும் வந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டு சிலவார்த்தைகள் பேசிவிட்டு, உடனே இடத்தைக் காலி செய்வதற்கு, பேசாமல் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப்போகலாம் என்று தோன்றுகிறது. இப்படி தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்தினால் அந்தப் படங்களுக்கே எல்லாவிருதுகளையும்  கொடுத்தால் மற்ற படங்களை தேர்வுக்குழுவினர் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே. எனவே இனி வரும் விழாக்களில் தேசிய விருதுபெற்ற படங்களைத்தவிர மற்றவற்றையே கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

கேரள சிறந்த நடிகர் விருதுபெற்ற சலீம்குமார் சொன்னார் “அதாயது ஞங்கட நாட்டில ஓரொண்ணினும் ஒரு சீஸனுண்டு, இது மாங்ஙா சீஸன், இது சக்க சீஸன் என்னுள்ளதுபோலே இது அவார்ட் சீஸனா. எனிக்கு இதுவரே 24 கிட்டிட்டுண்டு. இது இருபத்தஞ்சாமத்ததா.அங்கும் இதே கதைதான் போலிருக்கிறது. சின்னச்சின்ன காமெடிப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, முழுப்படத்திலும் ஒரு வயதான கதாநாயகத் தோற்றம், ஆதாமிண்டெமகன் அபு என்று படம், 25 விருதுகள். நம் ஊரில் வைரமுத்து என்றால் அங்கு ஒஎம்வி குரூப். ஒரு மாற்றாக மலையாள ஜாஸ்ஸிகிஃப்ட் கன்னடப்படத்திற்கு விருது வாங்கினார். அப்புறம் டூக்குடு என்று ஒரு படம். நம்ம ஊர் வெடிஎன்று சொல்லலாம்போல அத்தனை மசாலா, தெலுங்கின் சிறந்த படமாம். ஏகப்பட்ட விசில் கைதட்டல்களுக்கு நடுவே மகேஷ்பாபு விருது பெற்றார். நமக்கும் அவர்களுக்கும் சாப்பாட்டிலிருந்து சகலமும் வெவ்வேறு ரசனை.

நிகழ்ச்சியின் ஹைலைட்டுகளில் ஒன்று, கமல், தனது மகள் ஷ்ருதிக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருது வழங்கியது. மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு உணர்ச்சிவயப்பட்ட கமலுக்கு, தொண்டை கட்டிக்கொண்டதால் பேச்சு வரவில்லை. (மகளை  நினைத்தல்ல) வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.பி.முத்துராமனுக்கு வழ்ங்கியபோது அவர் இயக்கி கமல். ரஜினி நடித்த படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ரஜினிக்கு சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு மாதிரி தத்துவப்பாடல்களை ஒளிபரப்ப, கமலுக்கு நிலக்காயுது, நேத்து ராத்திரி போன்ற பாடல்கள். ரசிகர்கள் கொந்தளித்துக் கூக்குரலிட, கமல் ரொம்பவே நெளிந்தார்.


அதற்கப்புறமாய் ஸ்ருதியின் கலவையான கூடவே கவர்ச்சியான நடனமும். பின்னர் தமன்னா, பிரியாமணி, ரீமா, ரிச்சா கங்கோபாத்யாயா போன்றவர்களும் தங்கள் பங்குக்கு ரசிகர்களை 12 மணிவரை விழிப்புடன் வைத்திருக்க உதவினார்கள்.
இது தவிர வாழ்நாள் சாதனைப் பெண்மணி சீமா. அறிமுகமே அவளோட ராவுகள். இவருக்கு விருதுதரவந்த கமல் அவரை அணைத்துக் கொண்டே மேடையேறி அணைத்துக்கொண்டே இறங்கினார்.

2011ல் வெளிவந்த நூற்றி ஐம்பத்துச் சொச்சம் படங்களில் போராளி, மவுனகுரு, யுத்தம் செய், பயணம், அவன் இவன்,  போன்ற எதுவுமே எந்தத் தலைப்பிலும் பங்குபெறவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய செய்தி.  அட அதை விடுங்கள் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, போடிநாயக்கனூர் கணேசன், திருமங்கலம் பேருந்து நிலையம், பரிமளா திரையரங்கம், மதி கெட்டான் சாலை, உயிரின் எடை 21 கிராம், பிள்ளையார்தெரு கடைசி வீடு போன்ற  படங்களுக்கு அவற்றின் வித்தியாசமான தலைப்புகளுக்காகவாவது ஏதாவது சிறப்பு விருது கொடுத்திருக்கலாம். (எப்படியெல்லாம் யோசிச்சாங்களோ) யாரைக் குறை சொல்வது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவர்ஸ்டாரின் லத்திகா வை இப்படி மறந்திட்டாங்களே! என்று புலம்பியபடியே வீடு வந்தோம்.

ஆமா சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

ஃப்ராய்டுதான் கீழ்க்கண்ட தத்துவத்தை முதலில் சொன்னவர்.

விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும், நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன.” (அவனே மனிதன்)
 
ஆனால் பின்பு கேள்விப்பட்ட ஒரு செய்தி இதில் அடங்காதது, அன்று இரவு நடந்த பார்ட்டியொன்றில் மனோஜ்மஞ்சுவுடன் நெருக்கமானார் தாப்ஸி என்பதற்காக அவருடைய் நண்பரும் சக நடிகருமான மஹத் தால் மனோஜ் தாக்கப்பட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. இப்போது மீண்டுமொருமுறை சிக்மண்ட் ஃப்ராய்ட்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!